நவம்பர் 5-ந்தேதி முதல், மாணவர்களுக்கு தடுப்பூசி : சுகாதாரத்துறை ஏற்பாடு
தமிழகத்தில் நவம்பர் 5-ந்தேதி முதல், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :
கொரோனா காரணமாக, பள்ளிகள் திறப்பு தாமதமாகின. 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள், ஏற்கனவே நடைபெற்று வரும் நிலையில், தற்போது 1 முதல் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன.
அண்மைக்காலமாக நிலவி வரும் பெருந்தொற்று சூழலைக்கருத்தில் கொண்டு, வரும் நவம்பர் 5-ந்தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
5 முதல் 6 வயது வரை உள்ள மாணவர்களுக்கு டிபிடி எனப்படும் தொண்டை அடைப்பான் (டிப்தீரியா), கக்குவான் இருமல்(பெர்ட்டூசிஸ்), ரணஜன்னி (டெட்டன்ஸ்) தடுப்பூசியை வழங்க வேண்டும்.
10 வயதான மாணவர்களுக்கு ரணஜன்னி தடுப்பூசி வழங்க வேண்டும்.
இந்த நடவடிக்கையை டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்வது அவசியம். பள்ளியில் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.