விளிம்பு நிலையில் உள்ளவர்களை, கைதூக்கி விடுவதே தலையாய பணி : பிரதமர் மோடி உரை

By 
daya

200 ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தில் நிலவிய சமத்துவமற்ற நிலையை எதிர்கொள்ளும் சமூக சீர்திருத்த பணியை மேற்கொள்வதற்காக ஆர்ய சமாஜம் என்ற அமைப்பை தொடங்கியவர் மகரிஷி தயானந்த சரஸ்வதி.

1824ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பிறந்த இவர் ஏற்படுத்திய அமைப்பு, நாட்டில் கலாசார மற்றும் சமூக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. சமூக சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றை வலியுறுத்தியது.

அவரது 200வது பிறந்த நாளை முன்னிட்டு, அதனை நினைவுகூரும் வகையில் ஓராண்டுக்கு அதனை கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கத்தில் இன்று காலை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜைகள் மற்றும் யாகங்களை மேற்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

உலகை வளர்ச்சியை நோக்கி செலுத்துபவர்களில் ஒருவராக நாம் இருப்போம் என மகரிஷி தயானந்தஜி நம்பினார். அவர் காட்டிய வழி கோடிக்கணக்கான மக்களிடம் நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

இந்திய மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கான குரலாக அவர் விளங்கியபோது, சமூக வேற்றுமை, தீண்டாமை மற்றும் அதுபோன்ற பல சீர்கேடுகளுக்கு எதிராக கடுமையான பிரசாரம் தொடங்கி நடத்தினார்.

நாட்டின் இன்றைய மகள்கள் ரபேல் போர் விமானங்களில் கூட பறக்கின்றனர். ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்களை கைதூக்கி விடுவதே தலையாய முக்கியத்துவம் வாய்ந்த விசயம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார். 

Share this story