மெரினா கடற்கரை உள்பட 200 இடங்களில் நிலா திருவிழா..

By 
nsd

தேசிய அறிவியல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 200 இடங்களில் 'நிலா திருவிழா' நடத்தப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தேசிய அறிவியல் தினத்தையொட்டி 'நிலா திருவிழா 200' என்ற நிகழ்ச்சி கோவையில் 40 இடங்கள், சென்னையில் 30 இடங்கள், திருச்சியில் 25 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 200 இடங்களில் நடத்தப்பட உள்ளன.

வானவியலில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தொலை நோக்குடன் பல்வேறு இடங்களுக்கு சென்று இன்று முதல் 28-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் நிலா, வியாழன், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களையும் அன்றைய நாளில் தெரியக்கூடிய நட்சத்திர கூட்டங்களையும் காண்பிக்க உள்ளனர். இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு 6 கட்டங்களாக பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கியை கொண்ட வைணுபாப்பு அப்சர்வேட்டரி சார்பிலும் இந்த 4 நாட்களும் நிலா திருவிழா நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

சென்னையில் 30 இடங்களில் நிலா திருவிழா நடப்பது குறித்து உதயன் கூறியதாவது:- நிலா திருவிழா இன்று பெசன்ட் நகர் கடற்கரை வடக்கு பகுதியிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெரினா கடற்கரை பாரதியார் சிலை அருகிலும் திங்கட்கிழமை கிண்டி தேவதாஸ் அப்சர்வேட்டரியிலும், செவ்வாய்க்கிழமை கிண்டி அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்பட 30 இடங்களில் நடைபெறுகிறது என்றார்.
 

Share this story