தமிழகத்தில், நீட் தேர்வு முடித்த மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்' : சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
நீட் தேர்வை தமிழில் எழுத 19, 867 பேர் விண்ணப்பித்த நிலையில், அரசுப் பள்ளிகளில் இருந்து 11,236 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து தேர்வை எதிர்கொண்டனர்.
இந்த சூழலில், நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று முன்தினம் மேட்டூரை சேர்ந்த மாணவன் தனுஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
முதல்வர் வேண்டுகோள் :
அத்துடன் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இருப்பினும் இன்று அரியலூரை சேர்ந்த மாணவி கனிமொழி என்பவர் நீட் தேர்வு கடினமாக இருந்ததால், தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை எண்ணம் வந்தால் 104 எண்ணை அழைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவியல் ஆலோசனை :
இதுகுறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :
கடந்த ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை, ஜனாதிபதி ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியதை சட்டமன்றத்தில் அவர்கள் தெரிவிக்கவில்லை.
ஆட்சிக்கு வந்து, முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என்றுதான் கூறினோம்.
ஏற்கனவே அனுப்பப்பட்ட மசோதாவுக்கும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்கும் வேறுபாடு உள்ளது.
நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னர், தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் தரலாம் என துறை சார்பில் முடிவு செய்துள்ளோம்.
16 பேர் உயிரிழந்த நிலையில், நீட் சட்டமுடிவை நாடகம் எனக்கூறும் பா.ஜ.க.வை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டில், வரும் 14 ந்தேதி மீண்டும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்' என கூறினார்.