சினிமா விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் : பாஜக வலியுறுத்தல்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணமாலை, திரைப்பட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் உன்னிப்பாக கவனித்து, தங்களது கட்சிக்கு, சமூகத்திற்கு எதிரான கருத்துகள் இருந்தால், அதுகுறித்து தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். தலைவர்கள் விமர்சனம் செய்யும்போது, அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடிக்கிறது.
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெய்பீம்' படம் குறித்தும் விமர்சனம் எழும்பியது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் வெளியானது.
வன்முறையை தூண்டும் 'மாநாடு' படத்தை தடைசெய்ய வேண்டும் என பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‘திரைப்படத்துறை விமர்சனங்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும். கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர்கள் கூறும் கருத்து, நம் கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது.
எதற்காக பேச வேண்டுமோ, அப்போது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்’ என்றார்.