என்று தணியும் இந்த இயற்கை சீற்றம்? : கனமழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரம்..

By 
pakistan1

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 3 மாதமாக அங்கு கனமழை பெய்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

பாகிஸ்தானின் சிந்த் மாகாணம், கைபர் பக்துன்க்வா , பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் தான் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ள பாதிப்பால் பாகிஸ்தானில் தேசிய அவசர நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி 6.80 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை, வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 900க்கும் அதிகமானோர் பலியானதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்திருந்தது.

கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் மேலும் 45 பேர் பலியாகினர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 982 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 113 பேருக்கு பலத்த காயங்களும், 1,456 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ராணுவத்தை களமிறக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Share this story