நெல்லை கல்குவாரி விபத்து : உயிரிழந்த 6-வது நபர் மீட்பு
நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரியில், கடந்த 14-ந் தேதி பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சிக்கினர்.
இதில் முருகன், விஜயன் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம் என்பவர் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
6-வது நபர் :
பாறை இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 6-வது நபரான ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.
உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், குறிப்பிட்ட இடத்தில் அவரைத் தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வந்தனர்.
மீட்புப்பணி நிறைவு :
இந்நிலையில், கல்குவாரி விபத்தில் உயிரிழந்த நிலையில் 6-வது நபரின் உடல் மீட்கப்பட்டது.
கற்குவியல்களுக்கு கீழே, லாரியில் சிக்கியிருந்த ராஜேந்திரனின் உடலை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
6-வது நபரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணி நிறைவடைந்தது.
கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 6 பேரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*