தமிழக மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தயார் : முழு விவரம்..

By 
students5

1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பாலி டெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் அரசு பஸ்சில் இலவசமாக பயண செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர அரசு இதற்கான கட்டணத்தை போக்குவரத்து கழகங்களுக்கு வழங்குகிறது. கடந்த 2 வருடமாக கொரோனா பாதிப்பால் இலவச பஸ்பாஸ் அட்டை முறையாக வழங்கப்படவில்லை.

பழைய பயண அட்டைகளையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த வருடம் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் வழக்கமான முறையில் நடைபெறுகிறது. ஜூன் மாதம் பள்ளி தொடங்கியது.

மாணவர்கள் பயணம் செய்வதில் எவ்வித சிரமம் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு பயன்படுத்திய அட்டையை கண்டக்டர்களிடம் காண்பித்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதில் மாணவர்களிடம் கண்டிப்பாக நடக்கக்கூடாது எனவும் பஸ்களில் ஏற்றி-இறக்க வேண்டும் எனவும் கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 4 மாதமாக அரசு பஸ்களில் மாணவர்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் தயாரித்து வழங்கும் பணி சாலை போக்குவரத்து நிறுவனம் (ஐ.ஆர்.டி.) மூலம் நடந்து வருகிறது.

இதற்கான டெண்டர் விடப்பட்டு தமிழகம் முழுவதும் பஸ் பாஸ் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகள் மூலம் மாணவர்களின் பெயர், விவரங்களை 7 போக்குவரத்து கழகங்கள் சேகரித்துள்ளன. அதன் அடிப்படையில் ஒரு வருடத்திற்கான பஸ் பாஸ் தயாரிக்கப்படும். பள்ளிகளுக்கே நேரில் சென்று மாணவர்களை புகைப்படம் எடுத்து வழங்குவதற்கு அந்நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

பள்ளிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.களில் படிக்கும் 28 லட்சம் மாணவர்களுக்கு புதிய பஸ்பாஸ் அட்டை விரைவில் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதுகுறித்து ஐ.ஆர்.டி. அதிகாரி ஒருவர் கூறியதாவது:- இலவச பஸ் பாஸ் அட்டை தயாரித்து வழங்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இன்னும் 2 வாரத்தில் வழங்கப்படும். சென்னை, விழுப்புரம், மதுரை, சேலம், கோவை, கும்பகோணம், திருநெல்வேலி ஆகிய 7 போக்குவரத்து கழகங்கள் மூலம் இப்பணி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் மட்டும் சுமார் 41 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் அட்டை வழங்கப்பட உள்ளது.

Share this story