உலக மல்யுத்தப் போட்டி : மெகா சாதனை படைத்தார், இந்திய வீராங்கனை அன்ஷூ
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, அன்ஷூ மாலிக் வரலாறு படைத்துள்ளார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் நடந்து வருகிறது. இதில், பெண்களுக்கான 59 கிலோ உடல் எடைப்பிரிவில், கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சரிதா மோர் 8-2 என்ற புள்ளிக் கணக்கில் உலக சாம்பியனான கனடாவின் லின்டா மோரிஸ்சுக்கு அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து அவர் கால்இறுதியில், ஜெர்மனியின் சான்ட்ரா பருஸ்ஜிவ்ஸ்கியை வீழ்த்தினாலும், அரைஇறுதியில் 0-3 என்ற கணக்கில் பில்யானா ஸிவ்கோவாவிடம் (பல்கேரியா) போராடி வீழ்ந்தார்.
இதன் 57 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் 5-1 என்ற புள்ளிக் கணக்கில், மங்கோலியாவின் டேவாசிமெக் எர்கெம்பயரை தோற்கடித்த இந்திய ‘இளம் புயல்’ அன்ஷூ மாலிக், அரைஇறுதியில் சோலோமியா வின்க்கை (உக்ரைன்) 11-0 என்ற புள்ளி கணக்கில் வெளியேற்றி இறுதிச்சுற்றை எட்டினார்.
இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை 20 வயதான அன்ஷூ மாலிக் படைத்தார்.
தங்கப்பதக்கத்துக்கான ஆட்டத்தில், அவர் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஹெலின் மரோலிசுடன் (அமெரிக்கா) இன்று மல்லுகட்டுகிறார்.