உலக வில்வித்தைப் போட்டி : 2 வெள்ளிப்பதக்கம் வென்றது இந்தியா
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் ‘காம்பவுண்ட்’ பெண்கள் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
அபியும் ஜோதியும் :
இந்த போட்டியில் ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார், பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 224-229 என்ற புள்ளிக் கணக்கில் கொலம்பியாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.
இதன் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி 150-154 என்ற புள்ளிக் கணக்கில் கொலம்பியாவின் டேனியல் முனோஸ்-சாரா இணையிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது.
காலிறுதிக்கு தகுதி :
முன்னதாக நடைபெற்ற ‘ரீகர்வ்’ பெண்கள் தனிநபர் பிரிவில், கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா பகத் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரியாவின் காங் சாய் யங்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
'காம்பவுண்ட்’ ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா 145-142 என்ற புள்ளிக் கணக்கில் சுலோவக்கியாவின் ஜோசப் போசான்ஸ்கியை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.
இதன் பெண்கள் தனிநபர் பிரிவில், இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா 146-142 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரியாவின் சாவோன் சோவை தோற்கடித்து, கால்இறுதியை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.