ஆடுவதை நிறுத்திக் கொள்ளப்போகிறேன் : 'டென்னிஸ் சூறாவளி' சானியா மிர்சா முடிவு..
 

By 
sania3

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார்.

இந்நிலையில், சானியா மிர்சா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி ஆட்டமாகும். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

டபிள்யூ.டி.ஏ. இறுதி போட்டிக்கு பிறகு டென்னிஸ் ஆடுவதை நிறுத்திக் கொள்ளப் போகிறேன். துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டியோடு நான் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு சானியா மிர்சா கூறியுள்ளார்.

சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். 2011 பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் தோற்றார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சா 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றார்.

2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார். வருகிற ஆஸ்திரேலிய ஓபனில் சானியா மிர்சா, கஜகஸ்தான் வீராங்கனை அனாடேனிலாவுடன் இணைந்து ஆடுகிறார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வருகிற 16ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு சானியா மிர்சா ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜூவ் ராமுடன் இணைந்து கால் இறுதி வரை முன்னேறி இருந்தார்.

ஒற்றையர் பிரிவில் சானியா மிர்சா 2007ம் ஆண்டு 27வது வரிசையில் இருந்ததே சிறப்பான நிலையாகும். 2005ல் அமெரிக்க ஓபனில் 4வது சுற்று வரை முன்னேறியதே அவரது சிறந்த நிலையாகும். இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 24-வது வரிசையில் உள்ளார்.

Share this story