எனது எண்ணங்களை சிறைப்படுத்தவே முடியாது : ராகுல் திட்டவட்டம்
மகாத்மா காந்தி குறித்த இந்து மத தலைவரின் கருத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பதில் அளித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம், ராயப்பூரில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் பங்கேற்ற அப்பகுதி இந்து மதத் தலைவர் காளிச்சரண், மகாத்மா காந்தி குறித்து தவறான வார்த்தையை பயன்படுத்தினார்.
மேலும், கோட்சேவை இந்து மதத்தின் அடையாளம் என்று அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரை அடுத்து, காளிச்சரண் மீது ராய்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
இந்நிலையில், மகாத்மா காந்தி குறித்த காளிச்சரண் பேச்சிற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி பதில் அளித்துள்ளார்.
'நீங்கள் என்னை சங்கிலியால் பிணைக்கலாம், என்னை சித்ரவதை செய்யலாம், இந்த உடலை அழிக்கலாம், ஆனால், என் எண்ணங்களை நீங்கள் சிறையில் அடைக்க முடியாது' என்று மகாத்மா காந்தியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.