விடியல் அரசா.? விலையேற்ற அரசா.? : திமுகவுக்கு, ஓபிஎஸ் தரப்பு கண்டனம்
'தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்கள்.. ஓட்டுப் போட்ட தங்கள் விரலை கடித்துப் துப்புகிற கடுப்பில் தவிக்கின்றனர்' என திமுக அரசுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
ஆவின் பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் விலை ஏற்றம் செய்து, வரலாறு அறியாத விடியலை திராவிட மாடல் கம்பெனி, வாக்களித்த மக்களுக்கு வழங்கி இருக்கிறது.
மூன்று மாதம் முன்பு, மூன்று ரூபாய் விலை குறைப்பு செய்துவிட்டு, இப்போது நான்கு மடங்கு விலை ஏற்றம் செய்ததின் மூலம்..
அர்ச்சனை தட்டில் ஒரு ரூபாய் போட்டு விட்டு, நான்கு ரூபாய் சுருட்டும் காரியத்தை..விடியல் அரசு செய்து.. மக்களை விழிபிதுங்க வைத்து இருக்கிறது.
ஆம்... சொத்துவரி உயர்வு, பேருந்து கண்டன உயர்வு, மின்கட்டண உயர்வு, மதுபானம் விலை உயர்வு...
இதன் வழியில், பால் விலையை பன்மடங்கு உயர்த்தி, திமுக ஆட்சி ஒரு "உயர்"வான ஆட்சி என்பதை உறுதி செய்து இருக்கிறது.
தமிழக மக்களுக்கு அட்டவணை போட்டு தண்டனை தருவதில், விடியா ஆட்சி முனைப்பாக இருக்க..
தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்களோ.. ஓட்டுப் போட்ட தங்கள் விரலை கடித்துப் துப்புகிற கடுப்பில் தவிக்க..
நல்லாட்சி நடத்தாது, நாட்களை கடத்துகிறது..தி.மு.க நாடகங்கள் மட்டுமே நடத்துகிறது.
இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.