கணக்கெடுப்புக்கு பின் இழப்பீடு வழங்கப்படும் : முதலமைச்சர் ஸ்டாலின்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிப்படைந்த இடங்களை ஆய்வு செய்தவற்காக 3 அமைச்சர்களை நேற்று முன்தினமே அனுப்பி வைத்தேன். அவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் சிறப்பான பணி மேற்கொண்டனர்.
அதோடு நின்று விடாமல் நானும் நேரில் ஆய்வு நடத்துவதற்காக இன்று வந்து ஆய்வு செய்தேன். பொதுமக்கள் திருப்தியாக தான் உள்ளனர். இன்னும் சில குறைகள் மக்களிடம் இருக்கிறது. அதையும் முழுவதுமாக தீர்த்து வைத்து விடுவோம்.
மழையால் சேதமான பயிர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் கணக்கீடு செய்து முடித்த பிறகு உரிய இழப்பீடு வழங்கப்படும். எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக விமர்சனம் செய்வார்கள். அவர்களின் வீண் விமர்சனங்கள் குறித்து கவலையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.