மகாளய பட்சம் : முன்னோரை வழிபட முன்னேற்றம் பெருகும்
நேற்றைய 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நாளில் இருந்து மகாளய பட்சம் தொடங்குகிறது.
சாஸ்திர விதிப்படி ஒருவர், மறைந்த தன் மூதாதையர்களுக்கு ஆண்டுக்கு 96 நாட்கள் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
ஆனால், எல்லோராலும் 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய முடிவதில்லை. என்றாலும், முன்னோர்கள் இறந்த திதி நாளை கணக்கிட்டு, பெரும்பாலானவர்கள் திதி கொடுத்து விடுகிறார்கள். அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசையில் தவறாமல் தர்ப்பணம் செய்து விடுவார்கள்.
கவலை வேண்டாம் :
இப்படி எதுவுமே செய்யாமல், அதாவது திதி, தர்ப்பணம், சிரார்த்தம் என்று எதுவுமே செய்யாமல் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், அத்தகையவர்களுக்காகவே மகாளய பட்ச காலம் உள்ளது.
புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் தொடங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்களே மகாளய பட்ச நாட்களாகும்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மற்ற மாத அமாவாசை நாட்களை விட, இந்த மகாளய அமாவாசை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்,
அன்னதானம் :
இன்னும் சொல்லப் போனால், எந்த அமாவாசையும் இதற்கு நிகரே கிடையாது.
ஏன் தெரியுமா?
மகாளய பட்சத்தின் 15 நாட்களும் பித்ருக்கள் அனைவரும் வான் உலகில் இருந்து, தம் குடும்பத்தாரைத் தேடி பூமிக்கு வந்து விடுவார்கள்.
இந்த மகாளய பட்சமான 15 நாட்களும் மகாளய அமாவாசை தினத்தன்றும் கண்டிப்பாக மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய நாளில், உரிய வகையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
முக்கியமாக, மகாளய பட்ச நாளில் அத்தியாவசியப் பொருட்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும்.
முன்னேற்றம் :
இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் உங்கள் முன்னோர்கள், மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள்.
அவர்கள், மன நிறைவுடன் மகிழ்ந்து வாழ்த்த, உங்கள் வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும்.