பத்ரிநாத் கோவில் நடை சாத்தப்பட்டது : 5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
பத்ரிநாத் கோவில்
கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புராதன யாத்திரைத் தலங்களை தரிசிப்பது, சார்தாம் யாத்திரை எனப்படும்.
உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புராதன யாத்திரைத் தலங்கள் குளிர்காலத்தின்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால், சுமார் 6 மாத காலத்திற்கு நடை சாத்தப்படும்.
அவ்வகையில், இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்கியதையடுத்து, நவம்பர் 5-ம் தேதி கங்கோத்ரியில் நடை சாத்தப்பட்டது. நவம்பர் 6-ம் தேதி கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில் நடை சாத்தப்பட்டது.
சாமி தரிசனம் :
இந்நிலையில், பத்ரிநாத் கோவில் நேற்று மாலை 6.45 மணிக்கு சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு நடை சாத்தப்பட்டது. நேற்று மட்டும் 4000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டில் மொத்தம் 1,97,056 பக்தர்கள் பத்ரிநாத் கோவிலுக்கு வந்துள்ளனர்.
யாத்திரை நிறைவு :
கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு தலங்களை தரிசிப்பது சார் தாம் யாத்திரை எனப்படும். இந்த ஆண்டு சார் தாம் யாத்திரை செப்டம்பர் மாதம் 18-ம் தேதி தொடங்கியது.
நடை சாத்தப்படும் 4 கோவில்களில் பத்ரிநாத் கடைசியாக இருப்பதால், இது சார்தாம் யாத்திரை காலம் நிறைவடைவதை குறிக்கிறது.
இந்த யாத்திரை சீசனில், மொத்தம் 5,06,240 பக்தர்கள் தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.